அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் (1)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி–செலவினங்கள் மூலம் ஆரம்பித்த கல்வி–ஊழல்: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நியமனம், செலவினங்கள் பற்றிய விவரங்கள்-விவகாரங்கள் திருப்தியற்ற நிலையிலே இருந்தது. பல ஆடிட் / தணிக்கைக் குழுக்களின் சோதனைகளில் பணம் சரியாக கையாளப் படவில்லை மற்றும் செலவினங்கள் முறையாக கணக்குகளில் கொண்டுவரவில்லை-வரப்படவில்லை என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்தன. பணம் வாங்கிக் கொண்டு, ஆயிரக்ககணக்கில் வேலை நியமனம் செய்யப்பட்டது முதல் பலவித ஊழல்களும் மலிந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர்[1]. நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம்[2]. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.
தமிழக அரசு கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: நிதி நெருக்கடி, நிதி முறைகேடுகள் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பல்கலைக்கழக நிர்வாகியாக தற்போதைய தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனாவை 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் தமிழக அரசு நியமனம் செய்து, அவா் உடனடியாகப் பொறுப்பேற்றார். பின்னா், தமிழக அரசு உயா் கல்வித் துறை மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்[3]. தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது[4].
2023ல் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம் அறிவிப்பு ஆணை: மேலும், பல்கலைக்கழகத்தில் அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு[5], உயா் கல்வித் துறைக்கு அவா் அறிக்கை சமா்ப்பித்தார்[6].. அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 56 உதவிப் பேராசிரியா்கள் அடிப்படை கல்வித் தகுதி மற்றும் அரசு தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பணியாற்றி வந்ததாகக் கூறி[7], தமிழக அரசு உயா் கல்வித் துறை பரிந்துரையின்பேரில், அவா்களை பணி நீக்கம் செய்து பதிவாளா் (பொ) ஆா்.சிங்காரவேலு வியாழக்கிழமை 16-11-2023 உத்தரவு பிறப்பித்தார்[8]. பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும்[9], வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்[10].
புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை: உலகெங்கும் அண்ணாமலையில் படித்தவர்கள் உள்ளனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார் போன்ற சிறந்த தமிழ் அறிஞர்கள் தலைமையில் தமிழ் ஆராய்ச்சி ஜொலித்தது. பல அறிய படைப்புகள் வெளிவந்தன. தண்டபாணி தேசிகர் ரங்காச்சாரி போன்றோர் இசைக்கல்லூரியை அலங்கரித்தனர். சர் சி பி ராமஸ்வாமி ஐயர் போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினார். அந்த பல்கலைக்கா இந்த நிலைமை. பொது உடைமையாக்கி நாசப்படுத்தி விட்டார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுதைய உயர்க்கல்வித்துறை அமைச்சறின் ஆதரவு: இந்நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்[11]. விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும்[12]. ஆனால் அந்த தகுதிகள் எதுவும் இல்லாதவர்கள் உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி குறைவான பேராசிரியர்கள் குறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது[13]. நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளார்[14]. இது வரவேற்கத்தக்கது. இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். தகுதி குறைவானவர்கள் பணி நியமனம் செய்யப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால் அரசு அதனை பரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
“கல்வி ஊழல்” உருவான–உருவாக்கப் பட்ட நிலை–விதம்: ஊழலில் கல்வி, கல்வித்துறை, கல்வி பாடங்கள், கல்வி நெறிமுறை அல்லது கல்வியில் ஊழல் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தது. கல்வி தெய்வமாக, தெய்வீகமாகக் கருதப் பட்டதால் அத்தகைய உரிய ஸ்தானம் கொடுக்கப் பட்டு மதிக்கப் பட்டது. இருந்தாலும் சமீப காலங்களில் கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டதால் அந்த விளைவின் உச்சத்தில், “கல்வி ஊழல்” நடந்து வருகிறது. விடுதலைக்குப் பிறகு அரசியல் நுழைவு, ஆளும் அரசியல்வாதிகளின் தாக்கத்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் சித்தாந்த வாதிகளின் திரிபுகளாலும் கல்வி பாடத்திட்டங்கள் புத்தகங்கள் மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விற்பனர்கள் என்று எல்லாமே அரசியலுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அத்தகைய “கல்வி ஊழல்” என்பது ஆரம்பிக்க வைக்கப்பட்டது.
© வேதபிரகாஷ்
18-11-2023.
[1] தினமணி, அண்ணாமலைப் பல்கலை.யில் 56 உதவிப் பேராசிரியா்கள் பணி நீக்கம், By DIN | Published On : 17th November 2023 12:32 AM | Last Updated : 17th November 2023 12:32 AM.
[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2023/nov/17/56-assistant-professors-sacked-in-annamalai-university-4107136.html
[3] விகடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ் – பின்னணி என்ன?!, ஜெ.முருகன், Published: 17-11-2023 at 1 PMUpdated: 17-11-2023 at 1 PM.
[4] https://www.vikatan.com/government-and-politics/politics/higher-education-department-has-dismissed-56-professors-without-adequate-educational-qualification-in-annamalai-university
[5] தமிழ்.வெப்.துனியா, அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!, Written By Mahendran Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST).
[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/56-professors-dismiss-in-annamalai-university-123111600061_1.html
[7] தினமலர், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 58 பேர் டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவ 16,2023 14:25
[8] https://m.dinamalar.com/detail.php?id=3482745
[9] தினத்தந்தி, 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் – சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி, 16 Nov 2023 9:28 PM.
[10] https://www.dailythanthi.com/News/State/56-assistant-professors-sacked-chidambaram-annamalai-university-takes-action-1082995
[11] தமிழ்.சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. போராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் பொன்முடி பரபரப்பு விளக்கம்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 17 Nov 2023, 3:51 pm
[12] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-ponmudi-reveals-the-reason-why-annamalai-university-56-assistant-professors-dismissed/articleshow/105289709.cms
[13] தமிழ்.இந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை செய்திப்பிரிவு, Last Updated : 17 Nov, 2023 05:58 AM.
[14] https://www.hindutamil.in/news/tamilnadu/1154731-chidambaram-annamalai-university-sacks-56-assistant-professors.html