புத்தகங்களிலிருந்தும் சனாதனத்தை நீக்குவோம் – கல்வி அமைச்சரின் அறிக்கை அரசியலா, படிப்பிலும் மூக்கை நுழைக்கும் போக்கா, கல்வித்துறை சீரழியும் பாதைக்கு செல்கிறதா?
சனாதன பற்றிய சர்ச்சை: சனாதனம் குறித்து இடம்பெற்றுள்ள பள்ளி பாடப்புத்தகம் அடுத்தாண்டு மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பொழுது 26-09-2023 அன்று அறிவித்துள்ளார். இம்மாதம் முதல் வாரத்திலிருந்து, உதயநிதி பேசிய இந்துவிரோத, சனாதன ஒழிப்புப் பேச்சு, தமிழகம் மற்றுமல்லாது, இந்தியா முழுவதும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஒரு பக்கம், உதயநிதிக்கு ஒன்றும் தெரியாது, உளறியிருக்கிறார் போன்ற கருத்தை வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து அவர் பேசி வருவது, பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி [02-09-2023] நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளது தெரிந்த விசயமே. இது நாடு முழுவதும் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜக கடுமையான கண்டன கணைகளை வீசனர். போலீஸில் புகார், நீதிமன்றங்களில் வழக்குகள் என்றும் நிலுவையில் உள்ளது.
தமிழக அரசின் பாடபுத்தகத்தில் சனாதனத்தைப் பற்றிய விளக்கம் காணபடுகிறது: இந்நிலையில், 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற புத்தகத்தில் 58 ஆவது பக்கத்தில் சனாதனம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது[1]. இந்தியப் பண்பாடும் சமயங்களும் என அமைந்த பாடத்தில் இந்து என்னும் சொல்லின் பொருள் என கொடுக்கப்பட்ட பத்தியில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது[2]. அதில், “இந்து அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம்[3]. ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும்[4]. ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
‘சனாதன தருமம்‘, வர்ணாசிரம தர்மம் முதலியன: ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 59 ஆவது பக்கத்தில் இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், “இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் வெளியிடப் பட்டது, ஆனால் 2023லும் தொடர்கிறது: இத்தகைய வாக்கியங்கள் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகி இருப்பினும் கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசும் தமிழக அமைச்சர்களும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருகையில் அரசின் பாடத்திட்டத்தில் சனாதன தர்மம் என்பது அழிவில்லாத நிலையான அறம் என குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பிஜேபி தலைவர் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்[5]. பாட புத்தகத்தில் அண்ணாமலை குறிபிட்ட சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும். சுட்டிக்காட்டிய அண்ணாமலைக்கு நன்றி, என்று. – தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்[6].
சனாதனம் என்றால் என்ன? –பள்ளி புத்தகத்தில் சனாதன பாடம்: தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலெழுந்திருந்தது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் பேசிய நிலையில், அரசு வெளியிட்ட பள்ளி புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இருந்தது பெரும் விவாதப் பொருளானது. 12 ஆம் வகுப்பிற்கான “அறிவியலும் இந்தியப் பண்பாடும்” என்னும் புத்தகத்தில் வேதகால பண்பாடு என்னும் பாடத்தில் சனாதனம் குறித்து பாடம் இடம்பெற்றுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகத்தில் சனாதனம் என்றால் என்ன? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்து மதம் என்பதை சனாதனம் என்று கூறுவாரும் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சனாதனம் என்றால், அழிவில்லாத அறம் என்று பொருள் என 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதிமுக காலத்தில் பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் திமுக காலத்தில் தொடர்ந்தது ஏன்?: ஏற்கெனவே பாடபுத்தகத்தில் உள்ளது என்றால், அதற்கான ஆசிரியர் குழு உட்கார்ந்து, படித்து, பிறகு தான் எழுதியிருப்பார்கள். அந்நிலையில், நாளைக்கு அவர்களும் தாங்கள் எழுதியது சரியானது தான் என்று ஆதாரங்களைக் காட்டலாம். எனவே இவற்றையெல்லாம் மீறி, திமுக அரசு செயல்படுமா என்று கவனிக்க வேண்டும். சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், “இந்த புத்தகம் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது[7]. எனவே தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்” என்றும் கோரிக்கைகள் எழுந்தன[8]. யார் கோரிக்கைகளை வைத்தனர், அவர்கள் என்ன பாடத்தை எழுதியவர்களை பெரிய ஆசிரியர்களா, பண்டிதர்களா என்பதை சரிபார்க்க வேண்டும். தமிழ்நாடு அமைச்சர்களும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர்[9], என்று சில ஊடகங்கள் எழுதி வந்தாலும், ஸ்டாலின் இதைப் பற்றி பேசவில்லை. மாறாக, டி.ஆர்.பாலு கண்டித்திருக்கிறார்.
பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்?: இந்நிலையில் சென்னையில் தமிழோடு விளையாடு என்ற தமிழ் மொழி விளையாட்டு நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்[10]. அப்பொழுது ஊடகத்தினர் இப்பிரச்சினையை எழுப்பினர்[11]. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடப்புத்தகம் மாற்றப்படுகிறது என்றார்[12]. அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புத்தகத்தில் சனாதனம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்[13]. அதாவது, வழக்கம் போல முந்தை அரசு என்ற பாணியில் பேசியுள்ளது தெரிகிறது[14]. அடுத்தாண்டு இந்த புத்தகங்கள் மாற்றப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 2018ல் கொண்டு வரப் பட்டது என்றால், 2023ல் மாற்றப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மாற்றப் படவில்லை. அதாவது, அபொழுது அத்தகைய எண்ணமும் இல்லை, திட்டமும் இல்லை. இப்பொழுது, அரசியல் ஆகப்ப்பட்டு விட்டதால், அத்தகைய நிலை வலுக்கட்டாயமாக எழுப்பப் பட்டுள்ளது. இருப்பினும், அவ்வாறு பாடங்களை மாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது. உரிய கல்வியாளர்கள், அறிஞர்கள் தலையிட்டு இத்தகைய முயற்சிகளைத் தடுக்க வேண்டும், என்.சி.ஆர்.டி பாடங்களை மாற்றுகிறது என்றால், எதிர்ப்பு தெரிவிக்கப் படுகிறது. இப்பொழுது என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
27-09-2023
[1] புதியதலைமுறை, 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம்; சுட்டிக்காட்டி சேகர்பாபு,உதயநிதிக்கு அட்வைஸ் சொன்ன அண்ணாமலை!, Angeshwar G, Published on : 12 Sep 2023, 8:41 pm.
[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/texts-about-sanathanam-in-12th-lesson-annamalai-advised-udhayanidhi
[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanathanam: ‘சனாதனம் என்றால் அறம்!’ அரசின் பாடபுத்தகத்தால் வெடித்தது சர்ச்சை!, Kathiravan V • HT Tamil, Sep 12, 2023 04:04 PM IST.
[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/controversy-over-tamil-nadu-governments-textbook-on-sanathanam-131694514389887.html
[5] ஆசிரியர்.3,சனாதன தர்மத்தை பற்றிய வரிகள் அடுத்த கல்வியாண்டில் நீக்கப்படும் – தமிழ்நாடு, asiriyar3 September 15, 2023 TEXT BOOKS,
[6] http://www.asiriyar.net/2023/09/blog-post_15.html
[7] தமிழ்.நியூஸ்.18, பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் நீக்கம்? – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு, First published: September 26, 2023, 21:41 IST; LAST UPDATED : SEPTEMBER 26, 2023, 21:49 IST.
[8] https://tamil.news18.com/tamil-nadu/sanathanam-syllabus-in-school-book-will-change-next-year-1171913.html – gsc.tab=0
[9] தமிழ்,ஒன்.இந்தியா, தமிழக பாடபுத்தகத்தில் சனாதன கருத்துக்கள்.. எப்போது மாற்றப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம், By Halley Karthik, Published: Tuesday, September 26, 2023, 19:38 [IST]
[10] https://tamil.oneindia.com/news/chennai/minister-anbil-mahesh-has-said-that-sanatana-concepts-in-textbooks-will-be-removed-next-year-542665.html
[11] மின்னம்பலம், சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்,செப்டம்பர்.27, 2023. 10.03
[12] https://minnambalam.com/political-news/lesson-about-sanathanam-is-removed-anbil-mahesh/
[13] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு!, By Sivarangani -September 27, 2023.
[14] https://tamil.examsdaily.in/tamilnadu-school-students-syllabus-changed-from-next-year/
அரசியல்